இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவு உறுதி : ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதிபடுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு ஆதரவும் தெரிவித்தன.
தாக்குதலுக்கு கண்டனம்
அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் பிரதமா் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிர்ச்சிகர நிகழ்வு
இந்தநிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், காயமடைந்தோா் விரைவில் குணமடைந்து இந்த அதிர்ச்சிகர நிகழ்வில் இருந்து விடுபட இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
