புதிய இடதுசாரி அரசியல் சக்தியை உருவாக்க உவிந்து விஜேவீர மும்முரம்
தனியான அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின்(JVP) ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் கலாநிதி உவிந்து விஜேவீர(Uvindu Wijeweera) தெரிவித்துள்ளார்.
கண்டியில் அஸ்கிரிய விகாரையின் பிரதி ஆவணக் காப்பாளர் நாரம்பனாவே ஆனந்த தேரரைச் சந்தித்த போது இதனைக் கூறிய அவர், எந்த அரசியல் கட்சிக்கும் முட்டுக்கொடுக்காத, புதிய இடதுசாரி அரசியல் அமைப்பாக கட்சியை உருவாக்கப்போவதாக கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நான் ஆரம்பிக்கும் அரசியல் அமைப்பு சுயாதீன அமைப்பு ஆகும். எந்த அரசியல் கட்சிகளுடனும் சம்பந்தப்பட போவதில்லை.
அனைவரும் இணங்கக் கூடிய, நாட்டை கட்டியெழுப்பும் தேசிய சிந்தனையை தொனிப் பொருளாகக் கொண்டதாக எமது புதிய கட்சி இருக்கும்.
தேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்த பின்னர் பொது மக்கள் இணையக் கூடியதான பெயர், நிறத்துடன் அரசியல் கட்சியை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளளோம் என்றார்.
உவிந்து விஜேவீரவின் தந்தை ரோஹன விஜேவீர(Rohana Wijeweera), இலங்கையில் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் இரண்டு ஆயுத கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார்.
எனினும் அவை தோல்வியில் முடிந்தன. இந்தக் கிளர்ச்சிகள் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் இறுதியில் விஜேவீர உட்பட ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து 90 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சியில் உயிர் தப்பிய சோமவன்ச அமரசிங்க (Somavansa Amarasinghe)உட்பட மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களால் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் கட்டியெழுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.