வவுனியாவில் மர்ம மனிதர்கள் நடமாட்டம்! அச்சத்தில் மக்கள்
வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் கடந்த இருவாரங்களாக அதிகரித்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடல் முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டும், நிர்வாணமாக திரியும் இவர்கள் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும், வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்டுள்ளனர்.
குறித்த மர்ம மனிதர்களின் அட்டூழியங்கள் கடந்த இருவாரங்களாக அதிகரித்த நிலையில் மதவுவைத்த குளத்தில் வாழும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ் விடயம் குறித்து இப் பிரதேச மக்கள் வன்னிப் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் நேற்று முன்தினம் (05) முறைப்பாடு செய்தும் அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், மர்ம மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் குறித்த பிரதேச மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் இருக்க முடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.