ஆதன வரியை 8 வீதமாக குறைத்துள்ள வவுனியா மாநகர சபை : வெளியான அறிவிப்பு
வவுனியா மாநகரில் பல்வேறு தேவைகள் இருந்தும் ஆதனவரியை 8 வீதமாக குறைத்துள்ளதாக வவுனியா மாநகர சபை (Vavuniya Municipal Council) முதல்வர் சு .காண்டீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சபையின் ஆதனவரி 15வீதத்தில் இருந்த நிலையில் நாம் சபையை பொறுப்பெடுத்த பின்னர் அதனை 8வீதமாக குறைத்துள்ளோம்.
ஊழியர்களுக்குமான சம்பளம்
இது தொடர்பாக எனது மாநகர மக்களுக்கு சில தெளிவுபடுத்தல்களை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த ஆதனவரியை 8வீதத்தை விட இன்னும் குறைக்க முடியும்.
ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமான சம்பளத்தின் 40வீதமான பெறுமதியை அந்தந்த சபைகளே வழங்கவேண்டும்.
எதிர்வரும் வருடங்களில் அதன்100 சதவீதத்தையும் சபைகளே வழங்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் பாரியளவிலான நிதி அதற்கு ஒதுக்கவேண்டும். அத்துடன் வவுனியா மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டாலும் கிராமப்புறங்களில் உள்ள பல வீதிகள் குன்றும் குழியுமாகவே உள்ளது.
நிதி ஒதுக்கீடு
ஒருகிலோ மீற்றர் தார் வீதி அமைப்பதற்கு அண்ணளவாக 10மில்லியன் ரூபா தேவை. காப்பற் வீதிக்கு 20 மில்லியனும், அதே அளவிலான வடிகால் அமைப்பதற்கு 40மில்லியனையும் செலவழிக்கவேண்டும். இப்படி பல தேவைகள் மாநகரில் உள்ளது.
சபையின் சொத்துக்களை பராமரிக்க வேண்டியுள்ளது. எமது சம்பளத்தை விடுத்து ஒரு வட்டாரத்திற்கு அண்ணளவாக 5மில்லியனை மாத்திரமே ஒதுக்கக்கூடிய நிதிவளமே தற்போது உள்ளது. மாநகரின் பொதுத்தேவைகளுக்காக பாரிய அளவிலான நிதி ஒதுக்கவேண்டியுள்ளது.
நிலைமை இப்படி இருந்தும் 15வீதமாக இருந்த ஆதன வரியினை நாங்கள் அரைவாசியாக குறைத்துள்ளோம். வரி மதீப்பீட்டு பணிகள் வருடாவருடம் ஒழுங்கமுறையாக செய்யப்படாமையினாலே மக்கள் மீது இந்த வரிச்சுமை சடுதியாக அதிகரித்துள்ளது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

