சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசுக்கு துணைபோகாது தமக்கான நீதியைப் பெற்றுத் தர வலியுறுத்தும் உறவுகள்!
சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு துணைபோகாமல் தமக்கான நீதியினை வழங்க முன்வரவேண்டும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சாட்சிகளான தாம் உயிருடன் இருக்கும் போதே தமக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடத்தப்பட்டும், வலிந்தும், கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வவுனியா மாவட்ட உறவுகள் ஆரம்பித்த போராட்டம் இன்று நான்கு வருடங்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், பல்வேறு நீதி கோரிய வாசகங்களையும் தாங்கியிருந்தனர். உறவுகள் எங்கே, ஆணைக்குழுக்களும் வேண்டாம் விசாரணையும் வேண்டாம், பொய்யான அறிக்கையை வழங்கி சர்வதேசத்தையும் தமிழர்களையும் ஏமாற்றாதே, இனப்படுகொலையாளியை காப்பாற்ற நினைப்பவர்கள் தமிழினத்துரோகிகள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
சர்வதேச சமூகம் எமக்கான நீதியினை வழங்காமல் சிறிலங்கா அரசுக்கு துணைபோகின்றதா என்ற சந்தேகம் தமக்கு எழுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சாட்சிகளான தாம் உயிருடன் இருக்கும் போதே தமக்கான நீதி கிடைப்பதற்குரிய பொறிமுறைகளை சர்வதேச சமூகம் ஏற்படுத்தவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.