கைதுசெய்யப்பட்ட வெடுக்குநாறி ஆலய பூசகரும் நிர்வாக உறுப்பினரும் நீதிமன்றால் விடுவிப்பு
இரண்டாம் இணைப்பு
வவுனியா காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஆகியோர் வவுனியா நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் அண்மையில் உடைத்து அழிக்கப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.
எனினும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்ட போது, நீதிமன்ற உத்தரவு கருத்தில் கொள்ளப்படாமல் தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரிவித்து நெடுங்கேணி காவல்துறையினரால் ஆலயபூசாரியும், நிர்வாக உறுப்பினர் ஒருவரும் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந் நிலையில் குறித்த வழக்கிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் வவுனியா சட்டத்தரணிகள் பலர் ஆலயம் சார்பில் ஆஜராகியிருந்தனர்.
குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி தி. திருவருள், குறித்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசாரியும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்கிற்கு முரணாக அமையும் என்பதை சுட்டிக்காட்டிய நீதவான் வழக்கிலிருந்து அவர்களை விடுவித்திருந்தார்.
அத்துடன் ஆலயத்தில் கட்டுமானங்களையோ மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பூஜை வழிபாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை விரைந்து எடுக்குமாறும் காவல்துறையினருக்கு பணிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி காவல்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்ததுடன் நேற்றயதினம் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.
அதில் மழையினையும் பொருட்படுத்தாமல் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பூசாரி கைது
இதேவேளை விசாரணை ஒன்றிற்காக ஆலயநிர்வாகத்தினரை காவல் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி காவல்துறையினரால் நேற்றயதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றையதினம் காலை நெடுங்கேணி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
