வெடுக்குநாறி மலையில் சிலைகள் மீள் பிரதிஷ்டை செய்யப்படும் - அமைச்சர் ஜீவன்!
அண்மையில் வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பான முழுமையான விசாரணைகளை நடத்தி சரியான அறிக்கையை வழங்குமாறு காவல்துறைமா அதிபரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அதேசமயம், வருகின்ற ஞாயிறு அன்று வெடுக்குநாறி மலைக்கு தான் சென்று, அங்கு உடைக்கப்பட்ட சிலைகளை மீள் பிரதிஷ்டை செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பேன் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
கடும் சட்ட நடவடிக்கை
அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்,
"வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறி மலையில் நடந்த அட்டூழியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
குறித்த செயல் தொடர்பாக நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அதிபருக்கு தெரியப்படுத்தினோம், அவர் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டத்தை செயற்படுத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு இன, மத நல்லிணக்கம் என்பது மிக முக்கியம்.
இதனை ஏற்படுத்தவே எமது அரசாங்கம் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.
இந்தநிலையில், இவ்வாறான அமைதியை சீர்குலைக்கும் மோசமான செயல்களை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." இவ்வாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.