மட்டக்களப்பில் கோர விபத்து..! 16 மற்றும் 18 வயதுடைய இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மூன்று இளைஞர்கள் உந்துருளி ஒன்றில் வேகமாகச் சென்று வாகனமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு
இந்த விபத்தின்போது உந்துருளியில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிள் மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ள அதேவேளை உந்துருளியில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்பதுடன் அதிகவேகத்துடன் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

