பிரபாகரன் தொடர்பான உண்மைகள் பொதுவெளிக்கு வரும் - சிறிரங்கேஸ்வரன் தெரிவிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக அமைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட ஊடகப் போச்சாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் பிரபாகரனது இறப்பு தொடர்பான உண்மைகள் பொதுவெளிக்கு வரும் என்றும் அப்போது சிவாஜிலிங்கம் போன்றவர்களது பொய்மைகள் அனைத்தும் அம்பலப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்தொன்று தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25) ஊடகவியலார் சந்திப்பன்றை மேற்கொண்ட சிறிரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில்,
தமிழரது உரிமைப் போராட்டம்
தமிழரது உரிமைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும்வரை விடுதலைப் புலிகள் அமைப்பினரை அழிப்பதிலும் அழிவை ரசிப்பதிலும் அதீத அக்கறைகாட்டிவந்த தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலே அமைப்பினர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது இறப்பிலும் மகிழ்வடைந்தவர்கள் .
தமது அரசியல் சுயலாபங்களுக்காக பொதுவெளிகளில் உண்மையை மறைத்து பொய்மையை பாதுகாப்பதில் சிவாஜிலிங்கம் போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெலோ அமைப்பின் உறுப்பினரான சிவாஜிலிங்கம் எமது கட்சியியையும் தலைவரையும் ஊடக சந்திப்பொன்றை நடத்தி விமர்சனம் செய்திருந்தார். இது தாம் தொடர்ந்தும் கூறிவரும் பொய்மையை பாதுகாப்பதற்காகவே அவரால் கூறப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் அதன் தலைவரையும் மக்கள் நன்கு அறிந்திருப்பதன் வெளிப்பாடாகவே 1994 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வருகின்றார்கள்.
ஆனால் சிவாஜிலிங்கத்தையும் அவரது கட்சியின் செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருப்பதன் காரணமாகவே அவரை நிராகரித்து வருகின்றனர்.
இதனால் அவர் பல்வேறு குழுக்கள், கோஸ்டிகள் , அணிகள் என்று ஒரு நிலையான இடமின்றி தாவித்தாவி திரிவதை கண்ணுடாக கண்டுகொண்டிருக்கின்றோம்.
கொடூரம் புரிந்த சிவாஜிலிங்கம் தரப்பினர்
சிவாஜிலிங்கம் தரப்பினர் குடாநாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் சக போராளிகளையும் பொதுமக்களையும் நோயாளர்களையும் சுட்டு கொன்று குவித்து கொடூரம் புரிந்ததுடன் வவுனியாவிலும் கிழக்கு மாகாணத்திலும் வரதன் குழு என்ற பெயரில் செயற்பட்டு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் கடத்தி கொலை, கப்பம், சித்திரவதைகள் என பல அட்டூழியங்களை செய்துவிட்டு இன்று எங்கள் கட்சி மீது சேறு பூச முனைவது விடுதலைப் புலிகளின் சொத்துக்களை புலம்பெயர் தேசங்களில் முடக்கிவைத்திருக்கும் பினாமிகளிடமிருந்து கூலி வாங்குவதற்காக மட்டும்தான்.
எனவே சிவாஜிலிங்கம் போன்றவர்கள் எமது கட்சியைப் பற்றியோ தலைமையை பற்றியோ விமர்சனம் செய்வதற்கு எவ்வித அடிப்படை தகைமையும் அற்றவர்கள் ” - என்றார்.
