ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசை - விஜய்க்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றியீட்டியுள்ள நிலையில், ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவையின் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையொன்றைப் படைத்து மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பேரவை தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவையின் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்திருந்தது.
இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்கள்
அத்துடன் ஈழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்றிருந்த தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் மீதும் எமது மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும் வழங்கிய பேராதரவும் எமது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.

அன்று எமது மக்களின் துயர்துடைக்க எவ்வாறெல்லாம் தமிழ்நாடு துணை நின்றதோ அதே போன்றதொரு உறுதியான ஆதரவை உங்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்கள் நீண்டகாலமாகத் தங்களது தமிழ்த் தேச அங்கீகாரத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடி வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் பேரவலத்திற்குப் பிறகும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் எமது அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு ஒரு புதிய வலுவைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
[OPOP1TT ]
அரசியல் தீர்வு
அந்தவகையில் ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் நீங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், சர்வதேச அரங்கிலும் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் எமது நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொப்புள்கொடி உறவுகள் என்ற உணர்வோடு, எமது தாயகத்தின் விடியலுக்காக உங்கள் கரங்கள் நீளும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் எங்களுக்குண்டு. தங்களின் பணி சிறக்க எமது வாழ்த்துகள் என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |