பாடசாலைகளில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள் : பிரதமர் வெளியிட்ட தகவல்
கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08) நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விபரங்களைச் சமர்ப்பித்தார்.
இது குறித்து பிரதமர் மேலும் தெரிவித்ததாவது, 2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,026 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகல்
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2015 இல் 69 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2024 இல் 155 ஆகவும், 2025 இல் 159 ஆகவும் இது உயர்வடைந்துள்ளது.
இந்த வன்முறைக் கலாசாரத்தின் விளைவாக, இதுவரை 425 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகியுள்ளதுடன், ஆறு மாணவர்கள் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய பிரதமர், பாடசாலைகளில் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை திட்டங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 'வருகைக் குழுக்கள்' மூலம், பாடசாலைக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் இணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சு முன்னுரிமை
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தொழில்சார் ஒழுக்கநெறிகள் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பங்களிப்புடன் விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுகாதாரம், காவல்துறை மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து ஆபத்தான சூழல்களை முன்கூட்டியே கண்டறிந்து, மாணவர்களையும் பெற்றோர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலைச் சூழலை மாணவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு கல்வி அமைச்சு முன்னுரிமை அளித்துச் செயற்படும் என” பிரதமர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |