அத்துமீறிய கைதுகள் -விடுக்கப்பட்டது கடுமையான எதிர்ப்பு -பறந்தது கடிதம்
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து தனிமைப்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது கடும் ஆட்சேபனையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
கொவிட் -19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தல் பொருந்தும் என்றும் தனிமைப்படுத்தல் வேறு யாருக்கும் பொருந்தாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தனிமைப்படுத்தல் ஒரு சுகாதார நடவடிக்கை என்றும், அது தண்டனை அல்லது தடுப்புக்காவல் உத்தரவாக பயன்படுத்தப்படக்கூடாது என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் தங்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை நீதவான்கள் பிணையில் விடுதலை செய்த பின்னரும் அவர்களை சில தனிமைப்படுத்தல் முகாமிற்கு பொலிஸ் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களை எங்கு கொண்டு செல்கின்றோம் என்பதை அவர்களின் குடும்பத்தவர்களுக்கு கூட அறிவிக்காமல் கொண்டு சென்றுள்ளனர் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனை கவனத்தில் எடுத்துள்ளது. நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட தனிநபர்கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பலவந்தமாக பிடிக்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் பொது சுகாதார பரிசோதகர்கள் போன்ற சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்பதற்கான சிறிய ஆதாரமும் இல்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

