2025 உள்ளூராட்சி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்
புதிய இணைப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் தேர்தல் திணைக்களத்தினால் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று (16) கையளிக்கப்பட்டது.
வாக்காளர் அட்டைகளை மாவட்ட தேர்தல் திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 102,387 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16.04.2025) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 20 ஆம் திகதி வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தபால் மா அதிபர் ருவன் சத்குமார மேலும் கருத்து தெரிவிக்கையில், "வாக்காளர் அட்டைகள் இன்று வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவில் வாக்காளர் அட்டைகளை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
வாக்காளர் அட்டை
ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அதைச் செய்ய 29 ஆம் திகதி வரை நமக்கு அவகாசம் உள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 20ஆம் திகதி விசேட நாளாக ஒதுக்கியுள்ளோம். ஏனெனில் இவை முக்கியமான ஆவணங்கள், அவை கையொப்பமிடப்பட்டு வீட்டில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பின்னர் வீட்டில் உள்ள ஒருவர் கையொப்பமிட்டு அதைப் பெற காத்திருக்க வேண்டும். 29 ஆம் திகதிக்குப் பின் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடியாது.
அதன் பின் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெறக்கூடிய வசதியை நாங்கள் வழங்கியுள்ளோம்." என தெரிவித்தார்.
மேலும் இதுவரை பெறப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
