வீட்டை சுற்றி இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை : பாம்பு நடமாட்டம் இருப்பது உறுதி
பாம்பு என்றாலே அது மனிதர்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடத்தில் தான் இருக்கும் என்று சொல்வது உண்மையல்ல. வெயில் மற்றும் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி உணவு மற்றும் தண்ணீருக்காக அதிகமாக படையெடுக்கும்.
உங்கள் வீட்டைச் சுற்றி பாம்பு நடமாட்டம் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி, அது வீட்டுக்குள் நுழையாமல் தவிர்ப்பது எப்படி என்று இந்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.
பாம்பைக் கண்டால் படையும் நடங்கும் என்பார்கள். பாம்பு நடமாட்டம் வீட்டைச் சுற்றி இருக்கிறது அல்லது வீட்டுக்குள் எங்கோ பாம்பு நுழைந்து விட்டது என்பதற்கு சில அறிகுறிகள் வெளிப்படும். அவற்றை வைத்தே கண்டுபிடித்து விடலாம்
🔸 தோல் உரித்தல்
நாம் தினமும் அணிந்து செல்லும் சட்டையைக் கழட்டுவது போல, பாம்பும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தன்னுடைய உடலின் மேலே இருக்கிற மெல்லிய தோலை உரித்து நீக்கும்.
உங்கள் தோட்டம், மாடி, பொருள்கள் அடைத்து வைத்திருக்கும் பகுதி, உங்கள் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் எங்காவது பாம்பு உரித்துப் போட்ட தோல் இருந்தால் அது உங்கள் வீட்டுக்குள்ளேயோ அல்லது அருகிலேயோ சுற்றிக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம்.
🔸 சேறு நிறைந்த பகுதிகள்
உங்கள் வீட்டைச் சுற்றியோ, அருகிலோ, கேரேஜ் உள்ள பகுதிகளிலோ தரையோடு படிந்திருக்கும் தூசி மற்றும் சேறு ஆகியவை இருந்தால் நன்கு உற்று கவனிக்க வேண்டும்.
அவற்றில் ஏதேனும் வளைந்து நெளிந்த தடயங்கள் இருக்கிறதா, சறுக்கிச் சென்ற அடையாளங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அது சமீபத்தில் பாம்பு ஊர்ந்து சென்ற அடையாளமாக இருக்கக் கூடும்.
🔸 செல்லப்பிராணிகள் நடவடிக்கை
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு புதிதாக வீட்டைச் சுற்றி ஏதேனும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருந்தால் அதை முன்கூட்டியே கண்டுபிடித்து விடும். பூனை, நாய் ஆகிய இரண்டுக்குமே இந்த திறன் உண்டு.
பூனை கத்திக் கொண்டே இருக்கும். உங்கள் வீட்டு செல்லப் பிராணிகள் வித்தியாசமாக நடந்து கொண்டால், ஏதேனும் குறிப்பிட்ட சில இடங்களைப் பார்த்து தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருக்கிறது என்றால் அங்கு தேவையில்லாத ஏதோ பூச்சியோ பாம்போ வந்திருக்கிறது என்று அர்த்தம்.
🔸தவளை மற்றும் எலிகளின் சமிக்ஞை
பாம்புகள் நடமாட்டம் இருப்பதற்கான முக்கியமான அறிகுறியாக இதை சொல்லலாம். தவளை கத்திக் கொண்டே இருக்கிற சத்தம் அதிகமாக கேட்டால் அது பாம்பு நடமாட்டத்தின் அறிகுறி என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
அது அப்படியல்ல. உங்கள் வீட்டைச் சுற்றியோ அல்லது கொல்லைப் புறத்திலோ நிறைய தவளைகள், பல்லி, எலிகளின் நடமாட்டம் இருந்திருக்கும்.
திடீரென அவற்றில் எதையும் காணவில்லை என்றால் அவற்றின் தொல்லை ஒழிந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது வீட்டுக்கு அருகில் பாம்பு நடமாட்டம் இருப்பதன் முக்கிய அறிகுறி. அங்கிருக்கும் தவளை, எலிகளை பாம்பு தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது என்பதால் கவனமாக இருங்கள்
🔸 சீறும் சத்தம்
பாம்பு ஊர்ந்து செல்லும் சத்தம் கொஞ்சம் சலசலப்புடன் வித்தியாசமான சத்தத்துடன் இருக்கும். அதோடு பாம்பு சீறும் சத்தத்தை வைத்தும் பாம்புகள் நடமாட்டத்தைக் கண்டறிய முடியும்.
மேற்கண்ட அறிகுறிகளை வைத்து உங்கள் வீட்டுக்குள்ளோ அல்லது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ பாம்புகள் நடமாட்டம் இருப்பதைக் கண்டறிய முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
