நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புதிய இணைப்பு
ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகளும் அங்கமுவ குளத்தின் இரண்டு வான்கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அப்பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக இந்தக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (17.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு மாநகர சபை
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், கொழும்பில் நேற்று (16) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவசர பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான காற்று, இடி மற்றும் மின்னலுடனான மழை பெய்யக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
