நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் : சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஹட்டன் (Hatton) – கொழும்பு (Colombo) மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு சாரதிகளை கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, நேற்றிரவு முதல் மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு வேளையில் மழை
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் காற்று, மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
