பிரித்தானிய தலைமைத்துவ குழப்பநிலை - புதிய நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
பிரித்தானிய பிரதமர் பதவியில் லிஸ் ட்ரஸ் நீடித்தாலும் உண்மையான தலைமைத்துவத்தை தாமே வகிப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை புதிய நிதி அமைச்சர் ஜெரமி ஹண்ட் நிராகரித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் பதவியில் இருந்து லிஸ் ட்ரஸ்சை வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய நிதி அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய தலைமைத்துவ தெரிவு
பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சிக்கும் லிஸ் ட்ரஸ்சிற்கு பின்னால் அணி திரளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ்சினால் கொண்டுவரப்பட்ட வரிக் குறைப்பு திட்டங்கள் மீளப் பெறப்பட்டமை, ஆளும் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து லிஸ் ட்ரஸ்சை வெளியேற்றும் முயற்சிகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் புதிதாக நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள ஜெரமி ஹண்ட், புதிய தலைமைத்துவ தெரிவு என்பது, மக்களின் இறுதியான தெரிவாகவே இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் பணிப்புரைகளை வழங்குவதற்கு பொறுப்பாக லிஸ் ட்ரஸ்சே தொடர்ந்தும் இருப்பதாகவும் ஜெரமி ஹண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரிக் குறைப்புகள் திட்டங்கள்
அத்துடன் கடந்த மாதம் குறுகிய வரவு செலவுத் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட வரிக் குறைப்புகள் திட்டங்கள் மேலும் மீளப் பெறப்படும் விடயத்தில் அனைத்து தெரிவும் மேசையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடன் குறைப்பு திட்டங்களை எதிர்வரும் 31 ஆம் திகதி அறிவிக்கும் வகையில் நெருக்கடி நிலைமை தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் லிஸ் ட்ரஸ்சுடன் ஜெரமி ஹண்ட் பேச்சு நடத்தவுள்ளார்.
முன்னதாக குறுகிய வரவு - செலவுத் திட்டத்தில் பிரதமர் லிஸ் ட்ரஸ் அறிவித்த வரிக் குறைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் விமர்சித்தமை அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.