மைத்திரிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டாம் என கூறியது இப்போது புரிகிறதா? அமைச்சர் எழுப்பிய கேள்வி
பெருமை பேசுவதற்கு முன்னர், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும்(Maithripala Sirisena) ஏனைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகையின் கீழ் போட்டியிட்டனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
அரசாங்கத்தை நடத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை என சுட்டிக்காட்டினார். புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்தல், தற்போதுள்ள அரசியலமைப்பில் உத்தேச திருத்தம் போன்ற சில விடயங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் தேவை ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக கூறுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறினாலும் அரசாங்கம் கவிழாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்புடைய எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என தான் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.