உக்ரைன் -ரஷ்யா போர் முடிவிற்கு வருமா -துருக்கி அதிபர் தீவிர முயற்சி
உக்ரைன் -ரஷ்யா இடையே தற்போது தீவிரம் பெற்றுள்ள போரால் இரண்டு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த போரை நிறுத்தும் முயற்சியில் துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார். அவருடன் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.
போர்க் கைதிகளின் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது பற்றியும், உக்ரைன் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பிற்கு, ஐ.நா.வின் அணுசக்தி நிபுணர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்த விவகாரத்தில் துருக்கி மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக எர்டோகன் மீண்டும் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புடினுடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மேசையில் போர் முடிவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் நேற்று ஒரே இரவில் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகே நடக்கும் சண்டை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
அணுமின் நிலையத்திற்கு ஏற்படும் சேதம் தற்கொலைக்கு சமன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.