தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! காவல்துறை வெளிப்படுத்திய பரபரப்புத் தகவல்
தெஹிவளையில் உண்மையாக இலக்கு வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு பதிலாக தவறுதலாக மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களது 55 வயதுடைய தந்தை பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த தந்தை தற்போது கலுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலக்கு வைக்கப்பட்டிருந்த வீடு
இந்நிலையில், காவல்துறைப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் வெளியிட்ட தகவலின்படி, ஆரம்பகட்ட விசாரணைகளில் இத்தாக்குதல் தவறுதலாக வேறொரு வீட்டின் மீது நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள “படோவிட்ட அசங்க” என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் தொடர்புடைய ஒருவரின் வீடே உண்மையான இலக்காக இருந்திருக்க வேண்டும் என்றும், தாக்குதலாளிகள் தவறுதலாக அதன் அருகிலிருந்த வீட்டின் மீது கைக்குண்டை வீசியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கான காரணம்
படோவிட்ட அசங்க தரப்பினருக்கும் அவருக்குப் போட்டியான கொஸ் மல்லி என்ற பாதாள உலகக் குழுவினருக்கும் இடையே நிலவும் மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மூன்று காவல் குழுக்கள் களமிறக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26