யால தேசிய வனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்!
யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த இரண்டு வலயங்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.
கடும் வெப்பமான வானிலை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை மற்றும் வெப்ப அழுத்தம் கடுமையாகப் பாதித்துள்ளது.

மேலும், அதிகளவிலான சுற்றுலா ஜீப் வண்டிகள் வனத்திற்குள் பயணிப்பதால், தற்போதைய சூழ்நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் வறண்ட வலயத்தைச் சேர்ந்த யால 1 மற்றும் 2 மட்டுமன்றி, மன்னார் மற்றும் வில்பத்து தேசிய வனங்களை அண்டிய பகுதிகளில் நிலவும் நிலைமை தொடர்பிலும் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.
தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த வனங்களை மூடுவதற்கோ அல்லது விலங்குகள் மற்றும் அதிகாரிகளுக்கு வெப்ப அழுத்தம் இன்றி செயற்படுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |