புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு : வெளியான எச்சரிக்கை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பத்தாயிரம் ரூபா (10,000) வழங்குவதாக வெளிநாட்டில் இருந்து இயங்கும் யூடியூப் தளம் ஒன்றினால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படும் தகவலானது முற்றிலும் தவறானது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
மேலும், குறித்த யூடியூப் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டின் நகலை நாட்டிலுள்ள எந்தவொரு பணியக அலுவலகத்திலும் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ள போதும் பணியகம் அத்தகைய அறிக்கையை ஒருபோதும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறான மோசடி நடைமுறைக்குள் விழ வேண்டாம் என்று பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறானதொரு வேலைத்திட்டம் இதுவரையில் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், இது புலம்பெயர்ந்த சமூகத்தை தவறாக வழிநடத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரமே எனவும் பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை பரப்புவதற்கு இவ்வாறான சமூக ஊடகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், Facebook, Youtube மூலம் மட்டுமே வெளியிடப்படும் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
