மோசமான வானிலை காரணமாக நாட்டில் 11,832 பேர் பாதிப்பு
நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை மையம் (DMC) வெளியிட்டுள்ள சமீபத்திய நிலவர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், மொத்தம் 3,538 பேர் 51 பாதுகாப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
75 மி.மீ.க்கு மேல் கனமழை
மோசமான வானிலையால் சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 290 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. இதில் நுவரெலியா மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் மட்டும் 5,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் கணித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் மேகமூட்டமான வானம் நிலவும் என்றும், சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |