அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் நாட்டின் நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் - சமன் ரத்னப்பிரிய
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் இந்த நாட்டின் நாடாளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட ஒரு சட்டம். அதனால் அதனை புறக்கணித்து நடப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு முடியாது என அதிபரின் தொழிற்சங்க பணிப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்றை தினம்(21) ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்ககையில்,
“இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அதிபர் ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டை கூட்டி, கட்சிகளின் கருத்துக்களை கேட்டிருந்தார்.
என்றாலும் இந்த கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி கலந்துகொண்டிருக்கவில்லை. நாட்டின் பிரச்சினைக்கு மக்கள் விடுதலை முன்னணியினாலே தீர்வுகாண முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இனப்பிச்சினைக்கு தீர்காண ஆலோசனை வழங்குமாறு அழைத்தால் அதில் கலந்துகொள்வதில்லை. அவர்களுடைய ஆட்சியிலேயே பிரச்சினைக்கு தீர்வு இருப்பதாக தெரிவிக்கின்றனர். அப்படியானால் அது ஒருபோதும் இடம்பெற முடியாத ஒன்றாகும்.
நாட்டின் அபிவிருத்திக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அத்தியாவசியமான ஒன்றாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
அதனால்தான் அதிபர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சித்து வருகிறார் அதேநேரம் 13ஆம் திருத்தம் தொடர்பாக அதிபர் தனது கருத்தை நாடாளுமன்றத்துக்கு முன்வைத்திருக்கிறார்.
அது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தற்போது தெரிவிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும்.
அதனை செயற்படுத்த வேண்டும் அல்லது நாடாளுமன்றம் அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் 13ஆம் திருத்தம் தொடர்பில் சிலர் கூட்டம் நடத்தி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்ன கருத்துக்களை தெரிவித்தாலும் அது நாட்டின் சட்டம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு சட்டத்தை செயற்படுத்தாமல் இருப்பது என்பது சட்டத்தை மீறிய பாரிய குற்றமாகும் என்பதனையும் நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதனால் 13ஆம் திருத்தத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளை நாங்கள் வழங்க வேண்டும். அதனை தடுக்க முடியாது. தற்போதைக்கு செயற்படுத்த முடியுமான விடயங்களை செயற்படுத்துவதற்காகவாவது நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.