13 ஆவது திருத்தத்தில் உள்ள பொதுப் பட்டியலை நீக்குவது சிங்கள மக்களுக்கு ஆபத்து - உதய கம்மன்பில ஆவேசம்
13 ஆவது திருத்தத்தில் உள்ள பொதுப் பட்டியலை நீக்குவதற்கு அதிபர் ரணில் முன்வைத்த பரிந்துரையானது வடக்கு கிழக்கில் சிறுபான்மை மக்களாக வாழும் சிங்கள மக்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக மத்திய அரசாங்கத்தினால் தலையிட முடியாமல் போய்விடும் ஆபத்து உள்ளதாக பிவித்துறூ ஹெல உறுமய எச்சரித்துள்ளது.
13 ஆவது திருத்தத்தை தாண்டிய அதிகாரப் பகிர்விற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆணை வழங்கவில்லை என கூறியுள்ள பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, பொதுஜன பெரமுனவிலுள்ள சிலரும் 13 ஐ தாண்டிய அதிகார பகிர்விற்கு உடந்தையாக இருப்பதாக சாடியுள்ளார்.
அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டார் என ஆளும் கட்சி பிரதம கொறடவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்த நிலையில், கொழும்பில் இன்று (11.08.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ,
அதிபர் ரணில், நேற்று விசேட உரையாற்றி, நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதற்கும் நாடாளுமன்றத்தை ஏமாற்றுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் , 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் அதற்கு தேவையான பல சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் 36 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புதிததாக சட்டங்களை கொண்டுவர வேண்டிய தேவையில்லை.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் போர்வையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தாண்டிய அதிகார பகிர்வுக்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்தும் நோக்கில் பொதுப் பட்டியலை நீக்க வேண்டும் என்ற யோசனைய அதிபர் ரணில் முன்வைத்திருக்கிறார்.
மஹிந்தவின் 13 பிளஸ்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள பொதுப் பட்டியலை நீக்குவது என்பது, 13 ஆவது திருத்தத்தை தாண்டி அதிகாரத்தை பகிர்வதற்கு தயாராகின்றார் என்பதாகும்.
துரதிஷ்டவசமாக , 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தாண்டிய அதிகாரப் பகிர்வு, அதாவது 13 பிளஸ் என்பது, மஹிந்த ராஜபக்ஸவின் கொள்கை என கூறி, பொதுஜன பெரமுனவினரும் அதற்கு உடந்தையாக இருக்கின்றனர்.
13 ஆவது திருத்தத்தை தாண்டி அதிகாரத்தை பகிர்வதற்கு மஹிந்த ராஜபக்ஸ, எந்தவொரு மக்கள் ஆணையையும் பெறவில்லை.அவர் முன்வைத்த கொள்கை பிரகடனங்கள் எந்தவொன்றிலும் 13 ஆவது திருத்தத்தை தாண்டி அதிகாரத்தைப் பகிர்வதாக கூறவில்லை.
2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தம்முடன் நடத்திய பேச்சுகளில் 13 ஐ தாண்டிய அதிகார பகிர்விற்கு மஹிந்த ராஜபக்ஸ உறுதி அளித்தார் என இந்தியாவின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணன் இந்திய நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸ, ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் 13 ஐ தாண்டிய அதிகாரப் பகிர்வு குறித்து பேசிய போதிலும் உறுதி மொழி எதனையும் வழங்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
தோற்கடிக்கப்பட்ட மஹிந்த

13 பிளஸ் குறித்து உறுதி வழங்கிய மஹிந்த ராஜபக்ஸவை அடுத்த (2015)தேர்தலில் மக்கள் நிராகரித்தார்கள் என்பதை மறக்க கூடாது.
பொதுஜன பெரமுனவிற்கோ மஹிந்த ராஜபக்ஸவிற்கோ 13 ஐ தாண்டிய அதிகாரப் பகிர்விற்கு மக்கள் எப்போதும் ஆணை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தம் அரசியலமைப்பின் பிரதான பகுதி, ஆகவே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிபர் ரணில் பிரதானமாக தனது வாதத்தை முன்வைத்திருந்தார்.
13 ஆவது திருத்தம் கடந்த 26 ஆண்டுகளாக இருந்த அனைத்து அதிபர்களுக்கு கீழும் இருந்தது. இவ்வாறு இருந்த ஏழு அதிபர்களும் 13 ஆவது திருத்தத்திலுள்ள உள்ளடக்கத்தை நன்கு தெரிந்ததன் காரணமாகவே அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை.
விசேடமாக குறித்த ஏழு அதிபர்ககளில் ஆறு பேரின் அமைச்சரவையில் ரணில் விக்ரமசிங்க அங்கம் வகித்திருந்தார். தேர்தலை இலக்காக கொண்டே அப்போது நினைவிக்கு வராத 13 ஆவது திருத்தத்தை அவர் கையில் எடுத்துள்ளார் என்ற சாதாரணமான சந்தேகம் தமக்கு எழுந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.