செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்! நாடாளுமன்றில் அமைதியின்மை
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செங்கோலை கைப்பற்ற முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்ட பெரும் அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் திடீரென எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர விவாதம் ஒன்றை கோரிய நிலையில், இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரியிருந்தனர்.
அதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுந்தரப்பிடம் வினவியபோது, அதற்கு இணங்க முடியாது எனவும், தேவையெனில் குறித்த விடயம் தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு இணங்குவதாகவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
இன்றைய (23.06.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.00 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 முதல் மாலை 5.00 மணிவரை பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2482/09 மற்றும் 2487/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2487/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் என்பன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.
இதனையடுத்து, மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்படும் “நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம் எனும் தனிநபர் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு குறித்து ஆராய்வதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |