யாழ்.பல்கலையில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 16ம் ஆண்டு நினைவு தினம் (காணொளி)
செஞ்சோலை
முல்லைத்தீவு வல்லிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் ஆனது யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபியில் காலை 11:30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றப்பட்டதோடு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜகுமாரால் படுகொலை தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.
இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிரதிநிதிகள், மாணவர்கள், பல்கலைக் கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.