யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : சிறுவன் பலி! களத்திற்கு விரைந்த நீதிவான்
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் ரக வாகனம் ஒன்று, இன்று அதிகாலை 1.15 மணியளவில் சென்றுள்ளது.
வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
குறித்த வாகனத்தை அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் உத்தரவை மீறி குறித்த வாகனம் அதிவேகமாக சென்றுள்ளது.

குறித்த வாகனம் காவல்துறையினரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக வந்ததை அவதானித்த காவல்துறையினர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கற்பகப் பிள்ளையார் கோவில், வட்டு வடக்கு, சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அருள் ஃபயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபரை காவல்துறையினர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவத்தினை ஊர்காவத்துறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதேவேளை குறித்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |