மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம் : சட்டத்தரணி சுகாஸ் கண்டனம்
மன்னாரில் (Mannar) நீதிமன்ற வளாகத்தில் வைத்து இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மிக மோசமான செயற்பாடாகும் என சட்டத்தரணி க.சுகாஸ் (Kanagaratnam Sugash) தெரிவித்துள்ளார்.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திலே கடமை நிமித்தம் காவல்துறையினர் வழமையாக கூடுகின்ற நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஆட்சியில் இருக்கின்ற ஜே.வி.பி அரசாங்கம் கிளீன் சிறீலங்கா என்று படம்போடுவதை விடுத்து விட்டு உண்மையாக நாட்டை கிளீன் செய்ய வேண்டும்.
கிளீன் செய்வதாக இருந்தால் குற்றவாளிகளை, இலஞ்சம் ஊழலை, தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபடுபவர்களை கிளீன் செய்ய வேண்டும். தற்பொழுது ஆட்சியில் இருப்பது தாங்கள் தான் என்பதை ஜே.வி.பி உணர வேண்டும்.
மக்கள் நம்பி வருகின்ற நீதிமன்றத்திற்கு முன்னால் இருவர் படுகொலை செய்யப்பட்டமையை முதலில் தடுக்க வேண்டும்.
ஜே.வி.பி சிங்கள மக்களுக்கு நல்லது செய்வதாக இருந்தால் முதலில் நாட்டைக் கொள்ளையடித்து படுகுழிக்குள் தள்ளிய ராஜபக்சக்களை கைது செய்து சிறையில் அடையுங்கள். மத்திய வங்கியைக் கொள்ளையடித்த ரணில் விக்ரமசிங்க கூட்டத்தை கைது செய்து சிறையில் அடையுங்கள்.
தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதாக இருந்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை என்பவற்றைச் செய்யுங்கள்“ என வலியுறுத்தினார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்