கடந்த ஆறு மாதத்தில் இலங்கையில் துப்பாக்கிசூடு 20 பேர் பலி 13 பேர் படுகாயம்
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்படி ஜனவரி மாதம் முதல் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில்
2022 ஆம் ஆண்டில் மொத்தம் 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா குறிப்பிட்டார், இதில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் பிற காரணங்களும் உள்ளடங்கும்.
2022ஆம் ஆண்டு பதிவாகிய 559 கொலைகளில் 493 சம்பவங்களுக்கு தீர்வு காணவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்யவும் காவல்துறையால் முடிந்ததாக அவர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்றுவரை
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 225 கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 34 கொலைகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை என்றும், சில தனிப்பட்ட தகராறுகள் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகிய 225 கொலைகளில் 223 சம்பவங்களைத் தீர்த்து, சந்தேகநபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய காவல்துறையால் முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், 2023 இல் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கடந்த வருடத்தை விட குறைவாகவே காணப்பட்டதாக காவல்துறைஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
