கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்காக அதிகரிக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் பயணத்துக்கான பதிவுகளை (check-in) எளிதாக்கவும், பரபரப்பான நேரங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் பயணிகளுக்காக மேலும் 20 புதிய சுய பதிவு (Self-Check-in Kiosks) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (தனியார்) நிறுவனம் மற்றும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தரை கையாளுகை நிறுவனம் ஆகியன இணைந்து கூட்டாக அறிமுகப்படுத்தியுள்ளன.
புதிய இயந்திரங்கள் திறம்பட செயற்படவும், பயணிகளுக்கு மென்மையான அனுபவத்தை வழங்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தரை கையாளுகை நிறுவனத்தின் விமான நிலைய பிரதானி தீபால் பள்ளேகங்கொட தெரிவித்தார்.
சுய பதிவு இயந்திரங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் 8 சுய பதிவு இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 20 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மொத்த சுயபதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
விமானப் பதிவுக்கான (check-in) கால அவகாசம் மூன்று மணிநேரத்தில் இருந்து நான்கு மணிநேரமாக நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஓய்வுடனும் இலகுவாகவும் தங்கள் பயணப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
பயணிகள் தாங்களாகவே பதிவுகளைச் செய்து கொள்ளும் வகையில் சுயமாக பயணப் பொதிகளை இடும் வசதியும் (Self-Bag Drop) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வசதிகள்
அனைத்து விமானங்களுக்கான பதிவுகளும் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் முடிவடையும் என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த புதிய வசதிகள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகப் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளின் அனுபவமும் மேலும் சிறப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 3 மணி நேரம் முன்
