வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் (G.C.E A/L Exam Results) வெளியாகியுள்ள மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் இன்று (28) முதல் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்யவதற்கும், பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்ய அல்லது பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சைத் திணைக்களம்
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகியவற்றிலும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கிடையில், சகல அதிபர்களுக்கும் https://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக பெறுபேற்றைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) கடவுச்சொல் (Password) என்பவற்றை பயன்படுத்தி உரிய பாடசாலைகளின் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளன.
பெறுபேறுகளை மீளாய்வு செய்தல்
அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மாகாணம், பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் பெறுபேற்றை https://onlineexams.gov.lk எனும் இணைப்பினூடாக தரவிறக்கம் செய்து பார்வையிடவும் முடியும்.
உரிய பாடசாலைகளின் பரீட்சை பெறுபேற்று அட்டவணை மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறு வெளியிடப்பட்ட பின்னர் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பெறுபேறுகளை மீளாய்வுக்காக https://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக 2025.05.02 ஆம் திகதி தொடக்கம் 2025.05.16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
