கொடூரமாக பகிடிவதை செய்த காணொளி - 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் (South Eastern University) பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் வருட மாணவர்களை பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் புதிய மாணவர் குழுவிற்கு கொடூரமாக பகிடிவதை செய்த காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
பகிடிவதை செய்த சம்பவம்
இந்த விடயம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பகிடிவதை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழுவும் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அதிகாலை 2 மணியளவில் குறித்த மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களுள் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பகிடிவதை உட்பட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக செயலணி ஒன்றை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
