எல்லை தாண்டிய 29 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு தொடரும் விளக்கமறியல்!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 29 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த கடற்றொழிலாளர்கள் 29 பேரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (15.10.2025) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை
கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்கள் மற்றும் கடந்த 9 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டட 17 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்களின் வழக்கு விசாரணையும் இன்றையதினம் (15.10.2025) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த கடற்றொழிலாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இன்றைய தினம் (15.10.2025) குறித்த வழக்கை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கடற்றொழிலாளர்கள் 29 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


