அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிசூடு -வோஷிங்டனில் மூவர் பலி
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வோஷிங்டன் மாகாணம் யாக்கிமா நகரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
அங்கு சர்க்கிங்கே சந்தையில் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
வோஷிங்டனில் சந்தையில் தாக்குதல்
இதில் கடையில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த அவர் சுட்டதில் மேலும் ஒருவர் பலியானார். அதன்பின் துப்பாக்கி சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற தாக்குதல்தாரி
அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அந்த இளைஞர் ஒரு கிடங்குக்கு பின்னால் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு காவல்துறையினர் சென்று அவரை பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, "துப்பாக்கி சூடு நடத்திய நபர் 21 வயதான ஜரிட் ஹாடாக் என்பது தெரியவந்தது. அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு தனது தாயிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். அவருக்கும் சுட்டுகொல்லப்பட்டவர்களுக்கும் எந்த மோதலும் இல்லை'" என தெரிவித்தனர்.