22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து சபாநாயரின் அறிவிப்பு!
இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, குறித்த மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்றைய (19.08.2026) நாடாளுமன்ற அமர்வின் போது, தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள மனுக்களின் பிரதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டது.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த கோரி ஐக்கிய மக்கள் சக்தியும், 22வது திருத்தச் சட்ட மூல வரைவு அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரமும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |