வன்முறைச் சம்பவங்களால் 34 கிலோ தங்கம் மாயம்
அண்மையில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நகரசபை உறுப்பினரின் வீட்டிலிருந்து 34.5 பவுண் தங்கம் மற்றும் பெறுமதியான பொருட்களை காணவில்லை என கண்டி காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகர சபை உறுப்பினர் சங்கீத் சில்வாவின் மனைவி கரலியத்தே கெதர ரேணுகா தர்மவன்சவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலக்கம் 15, எஹலேபொல குமாரிஹாமி மாவத்தை, போகம்பரையில் உள்ள தனது வீட்டில் தங்கம், பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மே மாதம் 9ஆம் திகதி கண்டியில் ஜோர்ஜ் இ. டி சில்வா பூங்காவிற்கு முன்னால் உள்ள கோட்டா கோகம ஆர்ப்பாட்டக்காரர்களின் வளாகத்தில் குண்டர்கள் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அன்றிரவு சங்கீத் சில்வாவின் மூன்று மாடி போகம்பரை வீட்டிற்கு அருகில் கூடிய பெருந்திரளான மக்கள், அவரது வீட்டின் முன் கதவைத் தாக்கி, வீட்டிற்குள் நுழைந்து, அனைத்து பொருட்களையும் தீ வைத்து எரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.