மட்டக்களப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 சந்தேக நபர்கள் கைது
மட்டக்களப்பு - கரடியனாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் இன்று (11.04.2026 ) கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து பெரிய புல்லுமலை பிரதேசத்தில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதையல் தோண்டும் உபகரணங்கள்
இதன்போதே, சந்தேக நபர்களிடமிருந்து பூஜை பொருட்கள், புதையல் தோண்டும் உபகரணங்கள் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை வீரர், மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் வாழைச்சேனை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய நிலையில் தற்போது விசேட நடவடிக்கைக்காக மகா ஓயா முகாமில் இணைக்கப்பட்டு அங்கு கடமையாற்றி வருவதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மற்றும் உறுகாமம், தெய்யத்தகண்டி, பெரிய புல்லுமலை பகுதிகளைச் சேர்ந்த 44, 48, 48 வயதுடையவர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |