சிறைகளில் இடநெருக்கடி :அளவுக்கு அதிகமாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள்
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலவுவதாக முன்னாள் சிறைச்சாலைத் துறை செய்தித் தொடர்பாளர் லயன் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்தார். நாடு முழுவதும் 10,500 பேரை மட்டுமே தங்க வைக்கக்கூடிய வசதிகளில் 40,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் சிறைச்சாலை ஆணையாளரும் சர்வதேச லயன்ஸ் கிளப்பின் மாவட்ட 306 இன் தலைவருமான லயன் வீரசிங்க, உரகஸ்மன்ஹந்தியவில் உள்ள யட்டகல மகாவித்யாலயாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றியபோது, இதனைத் தெரிவித்தார்.
கைதிகளில் 65 சதவீதத்தினர் சிங்கள பௌத்தர்கள்
கைதிகளில் 65 சதவீதத்தினர் சிங்கள பௌத்தர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.

"40,000 கைதிகள் மற்றும் சந்தேக நபர்களில், 66 சிறுவர்கள் அடங்குவர். கூடுதலாக, 18 பெண்கள் உட்பட மரண தண்டனை விதிக்கப்பட்ட 806 குற்றவாளிகள் தண்டனைக் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்புக் காவலில் உள்ள பெண்கள்
கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 2,000 பெண்கள் தடுப்புக் காவலில் உள்ளனர். கைதிகளில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள், இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என்பது வருத்தமளிக்கிறது.

கல்வி நிர்வாக சேவையில் ஒரு மூத்த அதிகாரியின் மகன் கூட போதைப்பொருள் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்," என்று அவர் கூறினார்.
சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பலியாகும் சிறுவர்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களின் தூண்டுதலின் பேரில் சிறுவர்கள் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பலியாகிவிடுவதற்கான ஆபத்து உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் சமூக விழுமியங்களை வளர்த்து, நாட்டை வாழ சிறந்த இடமாக மாற்ற சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |