நீதிமன்றத்தை நாடவுள்ள பருத்தித்துறை நகரசபை... ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!
பருத்தித்துறை நகரசபையினாரால் பணியாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற 40 வீத சம்பள அதிகரிப்புக்கு நிதியின்மை காரணமாக சபையால் நிதி வழங்க முடியாதுள்ளதாகவும் இதனால் நீதிமன்றை நாடுவதென்று தீரமானிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று (30) காலை 9:15 மணியளவில் ஆரம்பமானபோது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது முதலாவதாக கடந்த கூட்ட அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
ரிட் சவாலுக்கு உட்படுத்துதல்
இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வீதிகளின் ஓரங்களை செப்பனிடுதல், வீதி விளக்குகளை விரைவாக பொருத்துதல், நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அறநெறி பாடசாலைகள் உருவாக்குவதை ஊக்குவித்தல், இலங்கை போக்குவரத்து சபைக்கு நவீன சந்தை தொகுதி அமைந்துள்ள பகுதியில் அலுவலகம் ஒன்றினை அமைத்துக் கொடுத்தல், வாடகை முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துதல், வரி அறவிடுதல், நவீன சந்தைப்பகுதியில் தனியார் அரச பேருந்து தரிப்பிடம் போன்றவற்றை பருத்தித்துறை காவல்துறையினர் கண்காணித்தல் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டன.

அத்துடன் சபை தீர்மானங்களை ஒழுங்கமைத்தல், நவீன சந்தை பகுதியின் மேல் பகுதி மழை நீர் ஒழுக்கு ஏற்படுவதாகவும் அதனை நிரந்தர தீர்வாக எட்டுவதற்குரிய நடவடிக்கை எடுத்தல், ஊழியர்களுக்கான 40 வீதமான கொடுப்பனவு அதிகரிப்பை வழங்கவேண்டும் என்று வழங்கப்பட்ட சுற்றுநிருபம் தொடர்பாக ஆராயப்பட்டு அதனை வழங்குவதற்கு நிதி சபையிடம் இல்லை என்றும் இதனால் மத்திய அரசின் சுற்றுநிருபத்தை மன்றினூடாக ரிட் சவாலுக்கு உட்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை மரக்கறி சந்தையை பழைய இடமான நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுமாறு கோரி அண்மையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் வர்த்தகர்களால் வழங்கப்பட்ட மகஜர் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
சந்தையை பழைய இடத்திற்கு மாற்றும் தீர்மானம்
அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் சமர்ப்பணங்கள், கட்டளை தொடர்பாக நகரசபை உறுப்பினர் சந்திரசேகர் வாசித்து தனது வாதங்களை முன்வைத்தார்.
அதற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து ஜெயகோபி தனது கருத்தில் அங்கு ஒருவழிப் பாதை, சிறிய வீதி, நீர் தேங்குமிடம் போன்றவை நிவர்த்தி செய்ய முடியாத குறைபாடுகளாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் சபையினால் சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவதென தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு சபையால் நவீன சந்தை பகுதியில் கீழ் தளத்தில் அமைப்பது தொடர்பாக ஆய்வுக்காக நிபுணர்குழு ஒன்று நியமிக்கப்பட்டதாகவும் அதன் முடிவு வரும்வரை ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
நகரசபையின் கழிவகற்றல் தொடர்பாக ஆராயப்பட்டு உரிய தரப்புக்களை அணுகி கழிவகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும், முனை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகத்தில் சிறுவர்களை வீதிக்கு செல்லாது பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது என்றும், அங்கு சிறுவர்களுக்குரிய பூங்கா என அறிவிப்பதென்றும், சபைக்கான சட்டத்தரணி ஒருவரை ஏல அடிப்படையில் பணிக்கு அமர்த்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன் பல்வேறு நிதிசார் கொடுப்பனவு தீர்மானங்ளும் நிறைவேற்றப்பட்டன.
இந்த அமர்வில் பருத்தித்துறை நகர சபையின் 14 உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |