பிரித்தானியாவில் கறுப்பு ஜூலை 40 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு
தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக அமைந்த 1983 - கறுப்பு யூலையின் 40ஆவது ஆண்டு நிறைவின் முகமாக, பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகள், தமிழ் பாடசாலைகள், சங்கங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றன ஒன்றிணைந்து எழுச்சிப் பேரணியொன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு Trafalgar சதுக்கத்தில் இந்த எழுச்சிப் பேரணியை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு “தமிழீழம் அமைதலே தமிழ் மக்களின் நிரந்தர பாதுகாப்பிற்கான ஒரே தீர்வு அத்துடன் சிறிலங்காவின் சுபீட்சத்திற்கும், ஸ்திரத்தன்மைக்குமான பாதையும் இதுவே தான்” என்ற கருப்பொருளைக் கொண்டு அமையவுள்ளது.
பிரித்தானிய தமிழ் மக்களுக்கு அழைப்பு

கறுப்பு ஜூலையின் போது சிங்கள காடையர்களின் கொடூரங்களை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி, கறுப்பு ஜீலையால் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களின் வாக்கு மூலங்கள், இன அழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட யூத மக்களின் பிரதிநிதிகள், மற்றும் மூத்த பிரித்தானிய நாடாளுமன்ற அங்கத்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் பேச்சுக்கள், கலை நிகழ்வுகள் ஆகியன இடம் பெறவுள்ளன.
ஆகவே, அனைத்து பிரித்தானிய தமிழ் மக்களும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு Trafalgar சதுக்கம் வந்து இப்படி ஒரு இன அழிப்பைத் தவிர்க்க வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி தமிழீழம் எனக் கூற வருமாறு பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.