12 நாட்கள் நங்கூரமிட்டு காத்திருந்த கப்பல் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!
12 நாட்களாக நங்கூரமிட்டு காத்திருந்த டீசல் மற்றும் விமான எரிபொருள் தாங்கிய கப்பலுக்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர் ஒல்கா தெரிவித்துள்ளார்.
12 நாட்களுக்கு முன் கொழும்பு நோக்கி வருகை தந்த இக் கப்பல், மிகுதி தொகை செலுத்தாததன் காரணமாக நாட்டினுள் வராமல் நடுக்கடலில் நங்கூரமிட்டு காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், 42 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டு கப்பல் நாட்டினுள் கொண்டு வரப்பட்டுவிட்டது.
இதன்படி, எரிபொருள் கப்பலின் வருகையால் 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 20,000 மெட்ரிக் டன் விமான எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இருப்பினும், கப்பலுக்கான தாமதக் கட்டணம் இதுவரை கணக்கிடப்படவில்லை.
மேலும், இந்திய கடனுதவியுடன் 35,000 மெட்ரிக் டன் பெட்ரோலை தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.