பற்றி எரிந்த யாழ். பொது நூலகம் - வரலாற்றுக் கொடுமை அரங்கேறி 45 ஆண்டுகள்
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில், நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது யாழ். பொது நூலக ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் யாழ். பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் உயிரிழந்த அருட்கலாநிதி H.S. தாவீது அடிகள் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூபி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை குறிப்பிடும் வகையில் 45 விளக்குகள் ஏற்றப்பட்டது.
தீயிட்டு கொளுத்தப்பட்டன
மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் டி. சி. அரவிந்தராஜ், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் இ. தயாளன், பொது நூலகப் பிரதம நூலகர் அனுசியா சிவகரன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெ. மயூரன், நூலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது.
சிங்களப் பேரினவாத கும்பல்
அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது. சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது.

தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது. இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20