தமிழர் தாயகத்தில் விகாரைகளுக்கு ஆக்கிமிக்கப்படும் 5000 ஏக்கர் காணி -ரணில் விடுத்துள்ள உத்தரவு
முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கும் திருகோணமலை திரியாய் விகாரைக்கும் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி உரிமை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு 3000 ஏக்கர் நிலமும் திருகோணமலை திரியாய் விகாரைக்கு 2000 ஏக்கர் நிலமும் கோரப்பட்டுள்ளது.
விஞ்ஞான ரீதியான காணி எனக் கூறுவதன் அடிப்படை என்ன
வனவளத் திணைக்களம், காணி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பெருமளவிலான காணியை விஞ்ஞான ரீதியான காணி எனக் கூறுவதன் அடிப்படை என்ன என்பதை உடனடியாகக் கண்டறியுமாறு அதிபர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் நிறுவப்பட்ட தொல்பொருள் அதிபர் செயலணியினால் இந்தப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தொல்பொருள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்தப் பகுதி ஒதுக்கப்பட வேண்டுமென செயலணி முடிவு செய்துள்ளது.
அனுராதபுரம் மகா விகாரைக்கு கூட இல்லாத காணி
பௌத்த தலைநகராக கருதப்படும் அனுராதபுரம் மகா விகாரை அல்லது தனித்துவமான நாகரிகத்தின் பாரம்பரியமிக்க சிகிரியாவுக்குக் கூட இல்லாத காணிகளை குருந்தூர் மலை விகாரையும் திரியாய் விகாரையும் ஏன் கோருகின்றன என்பதை விஞ்ஞான தரவுகளுடனும் ஆதாரங்களுடனும் ஆராய அதிபர் இந்தக் குழுவைநியமித்துள்ளார்.
