அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்
இலங்கை முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 16,000 மாணவர்களின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 55 புதிய விடுதித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது மொத்தம் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளதுடன், 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி இந்த புதிய விடுதிகள் கட்டப்படவுள்ளன.
இதற்கமைய, சபரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் ராஜரட்ட பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கே அதிகளவிலான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏழு விடுதித் திட்டங்கள்
இந்த இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் தலா ஏழு விடுதித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் 2,200 மாணவர்கள் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 2,000 மாணவர்களுக்கான ஆறு விடுதிகளும், கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு முறையே 1,600 மற்றும் 1,800 மாணவர்களுக்கான விடுதி வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
கட்டுமானப் பணிகள்
இவற்றுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், ருஹுன பல்கலைக்கழகம், கம்பஹா விக்கிரமாராச்சி பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களிலும் புதிய விடுதி வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த திட்டங்களில் பெரும்பாலானவை ஒப்பந்தப்புள்ளி கோருதல், மதிப்பீடு செய்தல் அல்லது கொள்முதல் செய்யும் கட்டங்களில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ருஹுன பல்கலைக்கழகம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில தளங்களில் ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |