உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு முன்பே சிஐடிக்குக் கிடைத்த 129 பயங்கரவாதிகளின் பட்டியல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம் உட்பட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) கருத்தியலால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் 129 நபர்களின் பட்டியலை, 2019 ஜனவரியிலேயே அரச புலனாய்வுச் சேவை (SIS) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுப்பியிருந்தபோதிலும், அன்றைய சிஐடி சிரேஷ்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்படுவதையும் தடுத்து வைக்கப்படுவதையும் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (17-07-2026) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதே இந்தச் சமர்ப்பிப்புகள் முன்வைக்கப்பட்டன.
மனுதாரர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஜனக் டி சில்வா ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின்படி சஹ்ரான் ஹாஷிம் உட்பட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 129 ஆதரவாளர்களின் பட்டியலை 2019 ஜனவரி 31 அன்று அரச புலனாய்வுச் சேவை (SIS) சிஐடியிடம் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
தீவிரவாத நடவடிக்கைகள்
இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் கருத்தியலை ஊக்குவிக்கும் நபர்களை அந்த அறிக்கை மிகத் தெளிவாக அடையாளம் காட்டியிருந்ததாக வாதிட்ட அவர், இவ்வாறானதொரு விரிவான புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்தும் அவர்களைக் கைது செய்ய சிஐடி ஏன் தவறியது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இலங்கையில் தீவிரவாதக் குழுவொன்று இயங்கிவருவது குறித்து 2018ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் உளவு அமைப்புகளும் இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் எஸ்ஐஎஸ் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன முன்னர் தாக்கல் செய்திருந்த சத்தியக்கடதாசியை மேற்கோள் காட்டிய சஞ்சீவ ஜயவர்தன, 2017 அக்டோபர் 31க்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடைப்பட்ட காலத்தில், சஹ்ரான் மற்றும் அவரது சகாக்களால் திட்டமிடப்பட்ட அல்லது நடத்தப்பட்ட தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து 97 புலனாய்வு அறிக்கைகளை காவல்துறை மா அதிபருக்கு (IGP) எஸ்ஐஎஸ் சமர்ப்பித்திருந்ததுடன், அந்த அறிக்கைகளின் பிரதிகள் சிஐடிக்கும் அனுப்பப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
மாவநெல்லை புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை மற்றும் வநாத்தவில்லுவ பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகள் ஏற்கனவே சஹ்ரான் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தியிருந்ததாக வாதிட்ட அவர், சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக நம்பப்படும் இடங்கள் குறித்த தகவல்களை எஸ்ஐஎஸ் புலனாய்வு அதிகாரி ஒருவர் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
விசாரணை ஆணைக்குழு
ஜயவர்தனவின் கூற்றுப்படி, சிஐடி தங்களுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின்படி முறையாகச் செயல்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்கலாம் என்று அந்த அதிகாரி இதற்கு முன்னர் விசாரணை ஆணைக்குழு ஒன்றில் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவிடமிருந்து (RAW) 2019 ஏப்ரல் 4 அன்று பெறப்பட்ட இறுதிப் புலனாய்வு எச்சரிக்கை குறித்தும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் விவரித்தார்.

சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாக அந்த எச்சரிக்கை இலங்கை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் எஸ்ஐஎஸ் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன அந்த எச்சரிக்கையைக் காவல் மா அதிபருக்கு அனுப்பியதுடன் அதன் பிரதியை சிஐடிக்கும் அனுப்பியிருந்தார்.
சமர்ப்பிப்புகளின்படி, அந்தக் கடிதம் 2019 ஏப்ரல் 9 அன்று அப்போதைய சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்னவின் அலுவலகத்தை சென்றடைந்தபோதிலும், அது ஏப்ரல் 16 அன்றே அப்போதைய பிரதிப் காவல்துறை மா அதிபர் நாகஹவத்தவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
அதன் பின்னர், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நடந்த மறுநாளான ஏப்ரல் 22 அன்றே சிஐடி பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜனக் டி சில்வா ஆணைக்குழுவின் முன்னிலையில் ரவி செனவிரத்ன அளித்த சாட்சியத்தை மேற்கோள் காட்டிய ஜயவர்தன, அவர் 2019 ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 13 வரை மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு சென்றிருந்ததாகவும், ஏப்ரல் 16 அன்று மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்றதாகவும், எனினும் அந்தப் புலனாய்வுக் கடிதம் ஏப்ரல் 19 அன்றே செனவிரத்னவின் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அந்தத் தீவிரவாதக் குழுவின் செயல்பாடுகள் குறித்து சிஐடி ஏற்கனவே அறிந்திருந்ததாகச் செனவிரத்ன ஆணைக்குழுவின் முன்னிலையில் ஒப்புக்கொண்டபோதிலும், அந்தத் தகவல் தொடர்பாக சிஐடியால் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க முடியாது என அவர் கூறியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில், தாக்குதலைத் தடுக்கத் தவறிய அதே அதிகாரிகளிடம் இப்போது மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணையை எவ்வாறு ஒப்படைக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய ஜயவர்தன, இவ்விடயத்தை நீதிமன்றம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கமைய, வழக்கை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனு மீதான மேலதிக விசாரணையை வரும் 2026 ஜூலை 21ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |