உயிரிழந்த காவல்துறைமா அதிபருக்கும் சலேவின் சாட்சியத்திற்கும் ஒரு நீண்ட தொடர்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (17) உயிரிழந்த முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன வழங்கிய வாக்குமூலங்கள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.
குறிப்பாக, முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன், விக்ரமரத்ன வழங்கிய சாட்சியங்கள் முக்கிய ஆதாரங்களாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளமை சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி, சி.டி. விக்ரமரத்ன இந்த வழக்கில் ஒருபோதும் சந்தேகநபராகக் கருதப்படவில்லை.
விசாரணைக்கு முக்கிய சாட்சி
மாறாக, விசாரணைக்கு முக்கிய சாட்சியாளராக பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குமூலம் வழங்கியவர். அவர் வழங்கிய தகவல்களே தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகளில் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், பதில் காவல்துறைமா அதிபராகவும் பின்னர் நிரந்தர காவல்துறைமா அதிபராகவும் பதவி வகித்த விக்ரமரத்ன, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.
தாக்குதலுக்கு முன்னர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைத்த எச்சரிக்கைத் தகவல்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளிடையே முறையாகப் பகிரப்படாதமை, பாதுகாப்பு ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் செயலிழப்பு குறித்து அவர் விரிவாக விளக்கமளித்திருந்தார்.
அதேவேளை, அவரது பதவிக்காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூத்த விசாரணை அதிகாரியான ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் மந்தமடைந்ததாக எழுந்த விமர்சனங்களும் அவரது நிர்வாக நடவடிக்கைகள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
2026 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளின்படி, சி.டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் CID பணிப்பாளர் நிஷாந்த டி சொய்சா ஆகியோர் வழங்கிய விசேட வாக்குமூலங்களில், அப்போதைய SIS தலைவர் சுரேஷ் சலே தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்கள் ஊடாக ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் திசையை மாற்ற முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகள் மீது தாக்கம் செலுத்த முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை விசாரணைகளுக்கும் புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையும் ஒருங்கிணைப்பும் இல்லாத நிலை காணப்பட்டதாகவும், சில முக்கிய புலனாய்வு தகவல்கள் காவல்துறைமா அதிபருக்குக் கூட முழுமையாகக் கிடைக்காத வகையில் பாதுகாப்பு அமைப்புகளின் உயர்மட்டங்களில் கையாளப்பட்டதாகவும் அந்த வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
சோனிக் சோனிக் - குறியீட்டு பெயர்
இந்த பின்னணியிலேயே, "சோனிக் சோனிக்" போன்ற குறியீட்டு பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்ட புலனாய்வு உறுப்பினர்கள் மற்றும் சில சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப புலனாய்வு அமைப்புகள் முயன்றதாக எதிர்க்கட்சியினரும் கத்தோலிக்க திருச்சபையும் நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் பின்னரேயாகும்.
அந்த ஆவணப்படத்தில் அசாத் மௌலானா, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கும் சுரேஷ் சலேவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
எனினும், அந்த குற்றச்சாட்டுகளை சுரேஷ் சலே முழுமையாக மறுத்ததுடன், அவதூறு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட புதிய விசாரணைகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சதித்திட்டம் தீட்டி, தாக்குதலை நடத்துவதற்காக அவர்களை வழிநடத்தியதாகவும், தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் சில முஸ்லிம் நபர்களைச் சந்தித்து கத்தோலிக்க தேவாலயங்களின் இருப்பிடங்கள் மற்றும் வழிபாட்டு விவரங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்று, இலக்குகளைத் தேர்வு செய்வதில் நேரடியாக ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
பல்வேறு ஆதாரங்கள்
எனினும், சுரேஷ் சலே தரப்பின் சட்டத்தரணிகள், இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்து, இது அரசியல் பழிவாங்கலின் விளைவு என்றும், தாக்குதல் நடைபெற்ற காலத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததாகவும் வாதிட்டு வருகின்றனர்.

சுரேஷ் சலேவின் கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் மற்றும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் கத்தோலிக்க திருச்சபையும் தற்போதைய விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்திருந்தாலும், அவர் உயிருடன் இருந்தபோது வழங்கிய வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை ஆவணங்களின் ஒரு பகுதியாக தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் நீதிமன்றத்தில் பல்வேறு ஆதாரங்கள், வாக்குமூலங்கள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தாலும், இவை அனைத்தும் இன்னும் விசாரணை நிலையில் உள்ள குற்றச்சாட்டுகளாகும்.
எனவே, நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை சுரேஷ் சலே உள்ளிட்ட எவரையும் சட்டரீதியாக குற்றவாளி எனக் கருத முடியாது என்பதையும் சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |