கடத்தப்பட்ட பேராசிரியர் கொலை : நீர்நிலையில் வீசப்பட்டது உடல்: பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
பிள்ளையான்(pillayan) குழுவால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் கிழக்கு பல்கலை முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தற்போது தெரியவந்துள்ளது, மேலும் அவரது உடல் ஒரு நீர்நிலையில் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ள தாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிள்ளையான் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை
இந்தக் குற்றத்தைத் தவிர, வேறு பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார். இது தொடர்பாக தகவல் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பிள்ளையானின் அலுவலகத்தில், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த 30 ஆம் திகதி காவல்துறை சிறப்புப் படையினரின் உதவியுடன் முழுமையாக சோதனை நடத்தினர். அலுவலகத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்கள் உட்பட்ட பொருட்கள்
இதன்போது 09 மிமீ துப்பாக்கிகளுக்கான 06 தோட்டாக்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், மூன்று கைபேசிகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிள்ளையானின் ஓட்டுநரும் ஏப்ரல் 17 அன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
