செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரிய போராட்டம் : யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு
புதிய இணைப்பு
செம்மணி மனித புதைகுழியின் நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவுகளை வழங்குவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று (04) இடம்பெற்ற போராட்டம் ஒன்றினை தொடர்ந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தினரால் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு சர்வதேச கண்காணிப்பு மற்றும் நியமங்களுடன் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி நாளை (05) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்குமா என கேள்வி எழுப்பபட்டது.
ஆதரவு வழங்குதல்
இதற்குப் பதிலளித்த அவர்கள், ”நிச்சயமாக எமது ஆதரவுகளை நாம் வழங்குவோம். செம்மணி மனித புதை குழியானது தமிழினத்திற்கு இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையில் இதுவும் ஒன்று.
யுத்தத்தில் காணாமலாக்கபட்ட எமது உறவுகளுக்கான நீதி இதுவரை நிலைநாட்டப்படவில்லை. இவ்வாறான சூழலில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து 7 மனித எச்சங்கள் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுள்ளது.
ஆகவே நாங்கள் பல்கலைக்கழக மாணவர்களாக சிவில் சமூகமாக இணைந்து இதற்கான போராட்டத்தினை நிச்சயமாக முன்னெடுப்போம் என தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
செம்மணிப் புதைகுழியில் சிறுமி - பெண்களின் எலும்புக்கூடுகள் - அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
யாழ். (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
புதைகுழியில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.
அரியாலை (Ariyalai) - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிறுமியின் எலும்புக்கூடு
இந்தப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற குழியில் நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமியின் எலும்புக்கூடும் காணப்படுகின்றது.
இங்கு அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. வேறு இடங்களில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களே இங்கு எடுத்து வரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
புதைகுழியில் காணப்படும் எலும்புக்கூடுகள்
அதற்குச் சான்றாகப் புதைகுழியில் காணப்படும் எலும்புக்கூடுகள் ஓர் ஒழுங்கு முறையாகவோ அல்லது சாதாரணமாகவோ காணப்படவில்லை.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
சுமார் 20 வருடங்களை அண்டிய காலப் பகுதியில் உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகளே இங்கு அடையாளம் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
