செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் வழங்கிய உறுதி மொழி
யாழ் - செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (04) நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ”கஜேந்திரகுமார் எம்.பி முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், துரிதமாக விசாரணைகளும் முன்னெடுக்கப்படும்.
கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு
இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்கின்றேன். அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கின்றேன்” என தெரிவித்தார்.
இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்படக்கூடிய அச்சம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
அத்துடன் புதைகுழி உள்ள பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கும், சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் போதுமானளவு நிதி இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
